ஆக்கச் சிந்தனை என்பது புத்தாக்கம் படைப்பதற்குத் தேவையான ஓர் அடிப்படை சிந்தனை. ஒருவரின் கற்பனை வளம் அவரின் ஆக்கச்சிந்தனையைக் வெளிப்படுத்திக் காட்டுகிறது என்கின்றார்கள். ஆனாலும் ஆக்கச் சிந்தனை நல்ல விளைபயனை தரவேண்டும். இல்லையெனில் அந்த ஆக்கத்தால் பயனேதுமில்லை.
பொதுவாக எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், கவிஞர்கள் எல்லாம் கற்பனை மிகுந்தவர்கள். அதனால்தான் அவர்களால் சுவைமிகுந்த படைப்புக்களைத் தரமுடிகிறது.
பாடசாலை மாணவர்கள், நோபல் பரிசுக்கு தகுதி பெறுகிற அளவிற்கு உலகமே வியக்கும் புதுமை அல்லது புத்தாக்கத்தை உருவாக்க முடியா விட்டாலும் (Big- Creativity, Big-C) சிறிய வகை புத்தாக்கம் செய்யவாவது பழக்கலாம்.
உண்மையில் மாணவர்களும் அந்தளவுக்கு ஆற்றல் உள்ளவர்கள்தான். ஒரு கட்டத்தில் அந்தத் திறமை வெடித்துக் கிளம்ப, பாடசாலைப் பருவத்திலே அவர்களை Mini- Creativity, Little- Creativity சிறிய புத்தாக்கங்களைச் செய்யப் பழக்க வேண்டும். அவர்கள் நூல் ஏட்டில் உள்ளதை உள்வாங்கி மனப்பாடம் பண்ணி அப்படியே பரீட்சையில் ஒப்புவித்து புள்ளிகளைப் பெறுவது மட்டும் போதாது. புதுமை, புத்தாக்கம் படைக்கும் ஆர்வத்தையும் ஊக்குவிக்க வேண்டும்.
21ஆம் நூற்றாண்டின் மனித வளம், தொழிற்துறைகள் எல்லாம் ஆக்கச் சிந்தனை மிகுந்தவர்களைச் சார்ந்து இருக்கிறது. இனி புத்தாக்கம் நிறைந்த கண்டுபிடிப்புகளைத் தருவோர் 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஆளுமைகளாகக் கொண்டாடப்படுவர். புதிய கண்டுபிடிப்புகள் சிக்கல்களுக்கு புதுத் தீர்வுகளைக் கொடுக்க வேண்டும்.
இருபத்தோராம் நூற்றாண்டுக் கல்வி மேலே குறிப்பிடப்பட்டத் திறன்களை வளர்த்தெடுக்க வேண்டும். மாணவர்கள் பல விடயங்களைத் தெரிந்தும் புரிந்தும் வைத்திருக்க வேண்டும் அதை விட அதைப் பயன்படுத்தவும் வேண்டும். இல்லையேல் கல்வியால் பயனில்லை.